பெறுநர்
தலைவர்,
நிர்வாகிகள் மற்றும்
அனைத்து உறுப்பினர்கள்
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
பேரன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துபாய் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள பல அத்தாட்சிகளையும் மற்றும் பல ஆச்சர்யமான, அபூர்வமான இடங்களையும் பார்க்கக்கூடிய பாக்கியம் பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ் !
கடந்த 26 - 03 - 2008 புதன்கிழமையன்று சென்னையிலிருந்து தாய் ஏர்வேய்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு துபாய் சென்றடைந்து பிறகு 10 - 04 - 2008 வியாழனன்று ஓமன் சென்று ஒரு வாரம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் தம்பி ஹஸன் அஹ்மது வீட்டில் தங்கியிருந்து பின்பு 17-04-2008 வியாழன்று மீண்டும் துபாய் வந்து ஒரு மாத காலம் தங்கி கடந்த 16-05-2008 வெள்ளியன்று நலமே தாயகம் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ் !
'ஒருவர் செய்த உதவிக்கு நன்றி செலுத்தாதவருக்கு அல்லாஹ் நன்றி செய்யமாட்டான்' என்ற நபி ( ஸல் ) அவர்களின் பொன்மொழிக்கேற்ப எனது இப்பயணத்தில் உடலால், உணவால், வாகனத்தால் பிற உபசரிப்பால் உதவி செய்து ஆதரித்த நல்ல உள்ளங்களுக்காக நான் அல்லாஹ்விடன் துஆச் செய்கின்றேன். மனம் நிறைந்த நன்றியையும், சலாத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் சென்னையிலிருந்து துபாய் பயணம் புறப்பட்டபோது கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் மாமு எம்.எஸ். நய்னா முஹம்மது அவர்களின் மகனார் அஸ்லம் அவர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டார். துபாய் நேரம் மதியம் 2.00 மணிக்கு நாங்கள் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளியான போது எங்களை வரவேற்பதற்காக காத்திருந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், பொருளாளர் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் சேட், பக்ருதீன், இஸ்மத்துல்லாஹ், ரியாள், ஹிபத்துல்லாஹ், சபீர் அலி மற்றும் பலரை சந்தித்தபோது உள்ளம் மகிழ்ந்தேன். விமான நிலையத்திலேயே தக்பீர் முழக்கத்துடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்த நிலை கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் !!
எனது இப்பயணத்தில் முதுகுளத்தூர் மற்றும் பல ஊர் சகோதரர்களை சந்தித்தேன். அவர்களால் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் அவர்களை குறிப்பிட்டுச் சொல்வதால் அது மிகையாகாது. ஹிதாயத் அவர்களின் ஏற்பாட்டின் மூலம்
1. நான்கு முறை ஜும்ஆவில் பயான் மற்றும் தொழுகை நடத்தவும்
2. அமீரகம் ஷார்ஜா சீமான் அமைப்பின் 10 ஆம் ஆண்டு விழாவின் மாணவர் நிகழ்ச்சியில் நடுவர்
3. அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை நிகழ்வில் வாழ்த்துரை
4. ஈடிஏ அஸ்கான் சமுதாயக்கூடத்தில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையில் இரு முறை பயான்
5. கோட்டைப் பள்ளிவாசலில் பயான்
6. சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி துபாயில் நடத்திய கூட்டத்தில் வாழ்த்துரை
7. ஈடிஏ அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய மருத்துவம் நிகழ்ச்சியில் வாழ்த்துரை
ஆகிய பல பொது நிகழ்ச்சிகளில் பயான் செய்ய, வாழ்த்துரை வழங்க சந்தர்ப்பம் கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ் !
17.05.2008 வியாழன்று ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், மஸ்கட் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து ஈடிஏ டி பிளாக்கில் எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் உபசரிப்பு, அனைவருக்கும் உணவு, பொன்னாடை, பரிசளிப்பு இத்தனைக்கும் மேலாக AWARD பட்டயம் வழங்கி கௌரவித்து 'ஆசானை' கண்ணியப்படுத்திய நல் உள்ளங்களை அல்லாஹ் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்துவானாக.
உழைத்துப் பொருளீட்ட வந்த நாட்டில் பிறந்த ஊரை, உறவை நினைவு கூர்ந்து உதவி, உபகாரம் செய்வதற்காகவே
'ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்' என்னும் அமைப்பை உருவாக்கி
1. 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்கட்கு ஆண்டு முழுவதும் இலவச தனிப்பயிற்சி ( டியூசன் ) நடத்து ISLAMIC STUDY CENTRE
2. மாணவ, மாணவிகளுக்காக நூலகம்]
3. ரமளானில் நலிந்தோருக்காக ( பித்ரா ) அரிசி மற்றும் பொருள்
4. கல்லூரிக் கல்வியை வறியோரும் பெற்றிட பொருளுதவி
இப்படி சமுதாயத்திற்காக பல உதவிகள் உபகாரங்களை செய்து வரும் இந்ஹ்ட ஜமாஅத்தின்
கௌரவ தலைவர் : ஹெச். ஹஸன் அஹமது
தலைவர் : என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன்
உதவித்தலைவர் : எஸ். ஷம்சுத்தீன்
பொதுச்செயலாளர் : முதுவை ஹிதாயத்
பொருளாளர் : ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் சேட்
ஆடிட்டர் : ஹெச். அமீர் சுல்தான்
ஒருங்கிணைப்பாளர் : ஹெச். இப்னு சிக்கந்தர்
மற்றும் அனைத்து பொறுப்புதாரிகள், உறுப்பினர்கள், பேராளர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து துஆச் செய்கின்றேன். எனது மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் மிகவும் சுறுசுறுப்பாக ஜமாஅத்தின் செயல்பாடுகள் மற்றும் ஊரில் நடக்கும் நிகழ்வுகள், நிக்காஹ், பொது நிகழ்ச்சி, வஃபாத் போன்ற செய்திகளை உடனுக்குடன் இணையத்தளத்தில் வெளியாக்கி ஊரறியச் செய்கிறார் என்பதை விட உலகறியச் செய்கிறார் என்பதே சரி. இவரின் இந்த சேவை ஊர், உறவு தாண்டி பிற ஊர் மக்களுக்கும் சென்றடைகிறது என்பதை நான் நேரில் கண்டேன். இவரது பொதுநலத்தொண்டைப் பாராட்டி துபாயில் உள்ள இந்திய துணைத்தூதரக அலுவலகத்திலிருந்து இவருக்கு இவர் சார்ந்திருக்கும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) மூலம் CERTIFICATE OF APPRECIATION எனும் பாராட்டுப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நமது மக்கள் நாடு கடந்தும் பாராட்டுப் பெறுகிறார்கள் என்பது கண்டு மகிழ்ந்தேன். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றேன். அல்ஹம்துலில்லாஹ் !
ஓமனில் தங்கியிருந்தபோது மஸ்கட்டிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து நபி அய்யூப் ( அலை ) , ஆலி இம்ரான், தாஜுதீன் ( சேரமான் ) போன்றோரை 'ஜியாரத்' செய்திட அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ள சிறப்புகளை, குறிப்புகளைப் பார்த்து பக்குவம் பெற்றிட என்னுடன் சலாலா வந்து ஜமாஅத்தின் கௌரவத் தலைவர் தம்பி ஹெச். ஹஸன் அஹமது அவர்கள் மீண்டும் 17-04-2008 வியாழன்று ஈடிஏ அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற ஜமாஅத் கூட்டத்திற்கு அதிசிறத்தையுடன் ஓமனிலிருந்து அவரின் துணைவியார் பரக்கத் ரஹ்மத்நிஸா, மகள் ஆயிஷா மரியம், மகன் உமர் முக்தார் ஆகியோருடன் வந்திருந்து கலந்து கொண்டமைக்கு அவர்கட்கு துஆவும் நன்றியும் உரித்தாகுக.
ஜமாஅத்தின் தலைவராக இருந்து செயல்படும் சகோதரர் நிஜாமுத்தீன் ஆலிம் ஒரே நேரத்தில் பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு 2, 3 டெலிபோனில் பேசிக் கொண்டிருக்க வேண்டிய உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டே ஜமாஅத்திற்காக ஆலோசனை வழங்குவதுடன் தேவைகளை நிறைவு செய்வதிலே மிக ஆர்வம் காட்டி வழி நடத்தும் நல்லவர். தனிப்பட்ட ரீதியிலும், அவர்களின் நண்பர்களுடன் இணைந்தும் அவர்களின் சேவை மிக்க மேலானது. அல்லாஹ் கபூல் செய்வானாக. அல்ஹமதுலில்லாஹ் ! அவர்கட்கு எனது நன்றியும் துஆவும் உரித்தாகுக.
அடுத்து
உதவித்தலைவர் ஷம்சுத்தீன் தலைவராகவே துடிப்புடன் செயல்படும் பாசமுள்ள சகோதரர்.
ஆடிட்டர் அமீர் சுல்தான் அமைதியாகவே இருந்து கடமையில் கருத்தாயிருந்து சேவை செய்யும் நேசமுள்ள தம்பி
பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் சேட் நம்பிக்கையுடன் அமைதியாக செயல்படும் அருமை மகன்
ஒருங்கிணைப்பாளர் இப்னு சிக்கந்தர் காலம் தாழ்ந்து அமீரகம் வந்து அனைவரும் இணைய பாலமாக செயல்படும் பாசமிகு தம்பி.
நிறைவாக
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் அங்கங்களான அனைத்து உறுப்பினர்கள், பேராளர்கள் மற்றும் எனது ஓமன் பயணத்தின் போது பல கார்களுடன் குடும்பத்துடன் வந்திருந்த ந்ல உள்ளங்கள், பல இடங்கட்குச் செல்லும் போதெல்லாம் உறவாக ஒன்றி குடும்ப சகிதம் கலந்து சிறப்பித்த சகோதர, சகோதரிகள்
மேலும் 25.04.2008 வெள்ளியன்று ஷார்ஜாவில் தேரிருவேலில் முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பை ஏற்படுத்தி உடனே அந்த நிகழ்விலேயே எனக்கு பாராட்டும், உபசரிப்பும் வழங்கிய ஐக்கிய அரபு அமீரக தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தாருக்கும் மேலும் உரிமையோடும் பாசத்தோடும் விருந்தளித்து உபசரித்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி முன்னாள் ஆசிரியப் பெருமக்கள் திரு செல்லம் மற்றும் அபரஞ்சி இவர்களது மகன் துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் பணியாற்றும் இளங்கோவன் அவரது தம்பி குமார் ஆகியோருக்கும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தில் நினைவு கூறவேண்டிய அனைவருக்கும் நன்றி ! துஆ !! வாழ்த்துக்கள் !!!
வஸ்ஸலாம்
அன்புடன்
எஸ். அஹ்மத் பஷீர் சேட்
முகவரி :
'ஹஜ்ரத் சேட் ஆலிம் சாஹிப்'
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495
muduvaisaitalim@gmail.com
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment